தன்னார்வ வேதியர் அடிப்படைப் பயிற்சி – சான்றிதழ் வழங்கும் விழா
கடந்த மே மாதம் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நல்லாயன் நிலையத்தில் தன்னார்வ வேதியர் அடிப்படை பயிற்சி பெற்ற 38 பேருக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நம் மறைமாவட்ட ஆயர் மேதகு. ச. ஆரோக்கியராஜ் தலைமையேற்க, மறைமாவட்ட முதன்மைச் செயலர் அருள்பணி. அமல்ராஜ், மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி. அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பயிற்சி அறிக்கையும், செயலர் தந்தையின் உரையும், பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் தந்தையின் வாழ்த்துரையும், ஆயரின் ஆசியுரையும் இடம் பெற்றன. பயிற்சி பெற்றவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி குறித்த தங்களது அனுபவப் பகிர்வுகளை மேற்கொண்டனர்.
பயிற்சி விபரம்: 2021 ஆம் ஆண்டு நவம்பர் 13 அன்று தொடங்கிய இப்பயிற்சி வகுப்புகள் எல்லா சனிக்கிழமைகளிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நல்லாயன் நிலையத்தில் நடைபெற்றது. இவ்வாறு மொத்தம் 18 வகுப்புகள் நடைபெற்றன. இவ்வகுப்புகளில் திருவிவிலியம், மறைக்கல்வி, திருவழிபாடு ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி வழங்கியவர்கள்: மேதகு. ச. ஆரோக்கியராஜ், அருள்பணி. டயனீசியஸ், அருள்பணி. சவரிமுத்து, அருள்பணி. விக்டர் ஜெயபாலன், அருள்பணி. அன்புராஜ், அருள்பணி. அருண் பிரசாத், அருள்பணி. அருள்ராஜா, அருள்பணி. மரியசூசை ஆகியோர் இவ்வகுப்புகளில் கருத்துரை வழங்கினார்கள். இவர்களுக்கு எனது தாழ்மையான நன்றிகளும் பாராட்டுக்களும்.
பயிற்சியில் பங்கேற்றவர்களின் பங்கு விபரம்: மேலப்புதூர், பழையகோவில், பசிலிக்கா, துரைசாமிபுரம், தெரசாள்புரம், சுப்ரமணியபுரம், ஏர்போர்ட், மணப்பாறை, அம்சம், தெப்பக்குளம், பொன்மலை, கொட்டப்பட்டு, கல்லுக்குழி, மாத்தூர், முல்லைக்குடி ஆகிய பங்குகளிலிருந்து மொத்தம் 38 பேர் இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர். இவர்கள் தங்கள் பங்குத்தந்தையர் வழியாகவும், பிறர் வழியாகவும் பயிற்சி குறித்து அறிந்துகொண்டு மிகுந்த ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் இப்பயிற்சியில் பங்கேற்றனர். இவர்களை அனுப்பி வைத்த இவர்களுடைய பங்குத்தந்தையருக்கு எனது எளிய நன்றிகளும் பாராட்டுக்களும்.
பங்குத் தந்தையர்கள் விரும்பினால் இவர்களைத் தங்கள் பங்குகளில் மறைக்கல்வி கற்பித்தல், திருவழிபாடு தயாரித்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்களில் தகுதியும் திறமையும் வாயந்தவர்கள் தேவையின் அடிப்படையில் மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழுவின் தன்னார்வ வேதியர்களாகவும் பயன்படுத்தப்படுவர். இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர் பயிற்சியும் வழங்கப்படும்.
நம் மறைமாவட்ட திருவழிபாட்டுப் பணிக்குழுவும், பாலர் சபைப் பணியகமும் இணைந்து, திருச்சி மறைமாவட்ட பீடச் சிறார் மாநாட்டை இவ்வாண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்து நடத்தியது. இந்நிகழ்வு சூன் மாதம் 4 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நல்லாயன் நிலையத்தில் நடைபெற்றது. திருச்சி மறைமாவட்டத்திலுள்ள 38 பங்குகளிலிருந்து 308 பீடச் சிறார் பங்குப்பெற்று பயனடைந்தனர். அருள்பணி. மைக்கிள் ஜோ அவர்கள் தொடக்கவுரை வழங்கி பீடச் சிறாரை உற்சாகப்படுத்தினார். திருவழிபாட்டுப் பணிக்குழச் செயலர் அருள்பணி. மரியசூசை பீடப்பணியாற்றுவோரின் மேன்மையைக் குறித்தும், பீடச் சிறாரின் வாழ்வும் பணியும் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அருள்பணி ஜே. சகாயராஜ் பீடச்சிறாருக்கு பீடப்பணி குறித்து விளக்கியதோடு, மன மகிழ்வுப் பாடல்களையும், விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்தார். பின்பு இரு பாலரும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இறையழைத்தல் ஊக்கவுரை கொடுக்கப்பட்டது. அருள்பணி. அந்தோணி ரமேஷ் திருத்தொண்டர் ஜெயராஜ் ஆகியோர் மறைமாவட்ட அருள்பணியாளருக்கான தங்களது இறையழைத்தல் குறித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். திருச்சி புனித அன்னாள் சபை, மரியின் ஊழியர் சபை, திருச்சிலுவை சபை, பிறரன்பு அருள்சகோதரிகள் சபை ஆகியவற்றிலிருந்து வந்திருந்த அருள்சகோதரிகள் தங்கள் இறையழைத்தல் குறித்தும், தங்கள் துறவற சபையின் பணிகள் குறித்தும் மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டனர். பீடப்பணி குறித்த செயல் பயிற்சியை மறைமாவட்ட அருள்சகோதரர்கள் பிரகாஷ், பெலிக்ஸ் ஆகியோர் வழிநடத்தினர். அதனைத் தொடர்ந்து பீடச் சிறார் தங்கள் சீருடையுடன் நல்லாயன் நிலையத்திலிருந்து பவனியாகப் புறப்பட்டு புனித மரியன்னைப் பேராலயத்தை வந்தடைந்தனர். அங்கு மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருள்பணி. அந்துவான் அவர்கள் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கி பீடச்சிறாரை ஆசீர்வதித்தார். இந்நிகழ்வுகளை செயலருடன் இணைந்து மறைமாவட்ட வேதியர்களும், தன்னார்வ வேதியர் பயிற்சி பெற்றோரும் ஒருங்கிணைத்தனர்.
பாலர் சபை (இயேசுவின் கண்மணிகள் இயக்கம்) வழிகாட்டிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிற கிறிஸ்துமஸ் விழாவானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நல்லாயன் நிலையத்தில் இறைவேண்டலுடன் தொடங்கியது. பாலர் சபையின் இயக்குநர் அருள்பணி. மரியசூசை இக்கல்வியாண்டுக்கான அறிவிப்புகள் மற்றும் திட்டமிடுதலை வழிநடத்தினார். அதனைத் தொடர்ந்து அருள்பணி. அன்புராஜ் குழந்தைகளை நம்பிக்கை வாழ்வில் வளர்த்தெடுப்பதற்கான அவசியம் குறித்து ஆழமான கருத்துரை வழங்கினார். பின்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது. அந்நிகழ்வுக்கு திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்பணி. அந்துவான் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். பள்ளி மாணவச் செல்வங்களின் ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. நிகழ்வின் இறுதியில் ஒவ்வொரு பள்ளிக்கும் பாலர் சபை நாட்காட்டிகளும், கிறிஸ்துமஸ் பரிசுகளும், கேக்கும் வழங்கப்பட்டன. இக்கொண்டாட்டத்தில் நம்முடைய மறைமாவட்டத்தில் செயல்படும் 62 கத்தோலிக்கப் பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பாலர் சபை தொடங்குவோம்!
திருத்தந்தையின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் சில அமைப்புகளுள் பாலர் சபையும் ஒன்று என்பது தனிச் சிறப்பு. ‘குழந்தைகளுக்கு குழந்தைகளே உதவுதல்’ என்னும் நோக்கத்தோடு திருத்தூதுப் பணியில் தங்களுடைய எளிய சிறிய தியாக காணிக்கையின் வழியாக பாலர் சபை உறுப்பினர்கள் செயல்படுவர். பங்குகளிலும், பள்ளிகளிலும் 14 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு கத்தோலிக்க குழந்தையையும் இதில் அங்கத்தினராக இணைத்து அவர்களை இறையன்பிலும், பிறரன்பிலும் வளரச் செய்வதும், அதன் வழியாக இறையழைத்தலை ஊக்குவிப்பதும் சாலச் சிறந்தது. பாலர் சபை தினத்தில் குழந்தைகளிடமிருந்து தியாக காணிக்கை பெற்று அது மறைமாவட்ட பாலர் சபை பணியகம் வழியாக திருத்தந்தைக்கு அனுப்பப்படுகிறது.
பாலர் சபை தினம்
நம் நாட்டில் பிப்ரவரி 2 ஆம் ஞாயிறு பாலர் சபை தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே அந்த நாளை பங்குகளிலும் பள்ளிகளிலும் சிறப்பாகக் கொண்டாடுவோம். இனி வரும் நாட்களில் நம் கத்தோலிக்க பள்ளிகளிலும், பங்குகளிலும் பாலர் சபையைத் தொடங்கி நம் மேலான வழிகாட்டுதலை வளரும் தலைமுறைக்கு வழங்குவோம். பாலர் சபையைத் தொடங்கவும், பணிகளை வகுத்துத் தரவும் மறைமாவட்ட பாலர் சபை பணியகத்தை அணுகவும்.